இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே ஆன முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. டி-20, ஒரு நாள் போட்டித் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, ஆண்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம். இந்திய அணி, இன்றைய போட்டியில் 4 பவுலர்களுடன் களமிறங்கும் என்று கோலி, சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதனால், ரஹானே, ரோகித் சர்மா, ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்டும் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மிரட்டுவார்கள். சுழலுக்கு அஸ்வின் இருக்கிறார்.
இந்த டெஸ்டில் விராத் கோலி சதம் அடித்தால், கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்வார். வெற்றி பெற்றால், டெஸ்டில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய கேப்டனான தோனியின் சாதனையை சமன் செய்வார்.
ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் திறமையான வீரர்கள் உள்ளனர். கேம்பல், ஷாய் ஹோப், சேஸ், டோவ்ரிச் ஆகிய பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் உள்ளனர். கெமார் ரோச், ஷனோன் கேப்ரியல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர் இந்திய வீரர்களை மிரட்டும் என்பதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.