ரோகித் ஷர்மாவை டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. டி-20, ஒரு நாள் போட்டித் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, ஆண்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்திய அணிக்கு முக்கிய சவால் ரோகித் ஷர்மாவை தேர்ந்தெடுப்பதா அல்லது ரஹானேவை தேர்ந்தெடுப்பதா என்பது தான் அது. ரோகித் ஷர்மா கடந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன் அவர் ஒருநாள் மட்டும் 20ஓவர் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் ஷர்மா நன்றாக விளையாடி வருகிறார். அதேபோல ரஹானே நடுகள பிரிவில் சிறப்பாக விளையாடும் திறன் உடையவர்.
ஆகவே என்னை பொறுத்தவரை ரோகித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவேண்டும். ரஹானே நடுகள வரிசையில் விளையாட வேண்டும். அப்போது தான் அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். மேலும் இந்தத் தொடருக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் விளையாடுவதான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் எதிராக டெஸ்ட் போட்டிகளில் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக அவரே களமிறங்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.