வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஆடும் லெவனில் அஸ்வின் சேர்க்கப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது, சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் அனுபவ வீரர் அஸ்வின், ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா அணியிடம் இடம் பிடித்தனர்.
அஸ்வின், ஆடும் லெவனில் இடம்பெறாததற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் கடந்த முறை வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடரில், தொடர் நாயகன் விருது பெற்றவர் அஸ்வின். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கலக்கினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 11 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 552 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 சதங்களும் அடங்கும். 60 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஸ்வின் சேர்க்கப்படாதது ஆச்சரியமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ’’பல ரெக்கார்டுகளை வைத்திருக்கிற, குறிப்பாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சாதனை படைத்திருக்கிற அஸ்வினுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காதது, அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.