கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு தனது முடிவை இப்போது மாற்றியுள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு. இந்திய அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதிருப்தி அடைந்த ராயுடு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி டிராபிக்கான ஒரு நாள் தொடரில், விளையாடுவதற் காக சென்னை வந்துள்ள ராயுடு, செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ‘’உலகக் கோப்பையில் விளையாட கடந்த 4 வருடங்களாகக் கடுமையாகப் பயிற்சி செய்து வந்தேன். நான் தேர்வு பெறவில்லை என்றதும் ஏமாற்றமடைந்தேன். இதனால், ஓய்வுக்கு இதுதான் சரியான தருணம் என நினைத்து அந்த முடிவை அறிவித்தேன். அது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்று கூற மாட்டேன். அதிகமாக எதிர் பார்த்திருந்த ஒன்று கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்டம் நோக்கி நகர்வதுதான் சரி என நினைத்து எடுத்த முடிவு.
இப்போது அதுபற்றி யோசிக்க நேரம் கிடைத்தது. இன்னும் சில வருடங்கள் விளையாடலாம் என முடிவு செய்துள்ளேன். இதுபற்றி கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுத இருக்கிறேன். அதோடு ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் எனக்கு ஆதரவளித்து வந்துள்ளது. அந்த அணி நிர்வாகமும் என்னிடம் பேசி வந்தது. கண் டிப்பாக அந்த அணிக்காக ஆடுவேன். அதற்கு முன் என் உடல் தகுதியை சரிசெய்துகொள்ள இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
‘’இந்திய அணிக்காக ஆட மீண்டும் வாய்ப்பு வந்தால் ஆடுவீர்களா?’’ என்று கேட்டபோது, ‘இப்போது அது பற்றி கவனம் செலுத்தவில்லை. நாட்டுக்காக ஆடும் வாய்ப்பு வந்தால் அதை மறுக்க மாட்டேன்’’ என்றார்.