ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற மோசமான சாதனைக்கு டேவிட் வார்னர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
தன்னுடைய அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடைக்கு ஆளானார். இதனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சற்றே சறுக்கல் ஏற்பட்டது. ஓராண்டு இடைவெளிக்கு ஐபிஎல் தொடரில் களமிறங்கினார் வார்னர். ஓராண்டு விளையாடாமல் இருந்த ஏக்கத்தை இந்தத் தொடரில் வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு போட்டியில் அப்படி அதிரடி காட்டினார். களத்தில் இறங்கினால் அரைசதம் அடிக்காமல் அவுட் ஆக மாட்டேன் என்ற முடிவுடன் விளையாடினார். ஐபிஎல் தொடரில் மொத்தம் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடி 692 ரன்கள் குவித்தார். இதில் 8 அரைசதம், ஒரு சதம் அடங்கும். லீக் சுற்றையே முழுமையாக விளையாடாத நிலையிலும், அவர் அடித்த ரன்களை இறுதி வரை யாருமே தாண்டவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய அதே வேகத்தை கொஞ்சமும் குறையாமல் உலகக் கோப்பை தொடரில் வெளிப்படுத்தினார் வார்னர். தொடக்க வீரராக ஆஸ்திரேலிய அணிக்கு வலு சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டி வரை சென்றது. 10 போட்டிகளில் விளையாடிய வார்னர் 647 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சதம், 3 அரைசதம் அடங்கும். இதிலும் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் சர்மாவுக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்தார்.
இப்படி தன்னுடைய ரன் குவிப்பால் ரசிகர்கள் கட்டிப் போட்டிருந்த வார்னர், ஆஷஸ் தொடரிலும் அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இது வார்னர்தானா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அவரின் ஆட்டம் படுமோசமாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் தலா 2, 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இரண்டாவது போட்டியிலும் 3, 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்சில் 61 ரன்கள் அடித்து சற்றே நம்பிக்கை அளித்தார். ஆனால், அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் நடந்ததுதான் சோகம். தொடர்ந்து மூன்று இன்னிங்ஸ்களில் டக் அவுட் ஆகி வெறுப்பேற்றினார்.
இந்த நிலையில்தான் தற்போது ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தற்போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய வார்னர் 5 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார்.
என்னதான் ஆச்சு வார்னருக்கு என்று அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த டெஸ்ட் தொடரில் மூன்று முறை தொடர்ந்து டக் அவுட் ஆனதோடு, 8 முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து மோசமான சாதனையையும் படைத்துள்ளார். இந்த தொடரில் 6 முறை ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். உலகக் கோப்பை தொடர்களில் சதம், சதமாக அடித்த வார்னர், இந்தத் தொடரில் மொத்தமாக கூட அவர் 100 ரன்களை கடக்கவில்லை. அதிரடி ஆட்டக்காரர் என்று பெயர் வார்னருக்கு, இந்த ஆஷஸ் தொடர் சோகத்தில் முடிந்துள்ளது.