ரோகித் ஷர்மாதான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் ரோகித் ஷர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘தி இந்து’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் வேகப்பந்து வீச்சாளர் ஷமி ஆட்டத்தின் நான்காவது இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியது மிகவும் சிறப்பானது. முகமது ஷமி தனது குடும்ப பிரச்னைகள் இருந்தபோதும் சிறப்பாக பந்துவீசியது மிகவும் பாராட்டுக்கு உரியது.
பும்ராவின் காயம் சற்று வருத்தமளிக்கிறது. நாங்கள் அதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் அவர் மீது உள்ள ஆட்டச் சுமையை குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அதேபோல ஹர்திக் பாண்ட்யாவின் அறுவை சிகிச்சை நன்றாக முடிவடைந்துள்ளது. அவரின் உடல்நிலை குறித்து இன்னும் சில வாரங்களில் எங்களுக்கு தெரியவரும்.
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி திரும்பி ஆடவேண்டும் என்ற முடிவை அவர் தான் எடுக்கவேண்டும். உலகக் கோப்பை தொடருக்குப் பின் நான் இன்னும் தோனியை சந்திக்கவில்லை. தோனி இந்திய அணியின் சிறப்பான வீரர்களில் ஒருவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் ஷர்மா இடம்பெறாதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதனால்தான் அந்தத் தொடருக்குப் பிறகு ரோகித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்று நான் விராட் கோலியுடன் ஆலோசனை நடத்தினேன். அதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சதம் அடித்து அசத்தினார்.
மேலும் சாஹா உலகளவில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர். இந்தியாவில் இருக்கும் ஆடுகளங்களில் பந்துகள் சில நேரத்தில் சரியாக எழும்பாது. இந்தச் சூழல்களில் சாஹா சிறப்பாக செயல்படுவார். எனவே தான் அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ரிஷப் பன்ட் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.