விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில், மத்திய பிரதேசத்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் அபினவ் முகுந்த், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தமிழக அணி அபார வெற்றிபெற்றது.
விஜய் ஹசாரே டிராபிக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த லீக் போட்டியில், மத்திய பிரதேசம்- தமிழக அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 4 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் சதம் அடித்தார். அவர் 139 பந்துகளில் 147 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 90 ரன்களும் கேப்டன் தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய மத்திய பிரதேச அணி, 28.4 ஓவர்களில் 149 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் தமிழக அணி, 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதியை தமிழக அணி உறுதி செய்தது.
நடப்பு விஜய் ஹசாரே கோப்பைக்கானத் தொடரில், தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து 8-வது வெற்றியை தமிழக அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.