தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 108 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 91 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் இன்னிங்சில் 326 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நான்காம் நாளான இன்று தென்னாப்பிரிக்காவுக்கு பாலோ ஆன் வழங்கியது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்க அணி இழந்தது.
ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் சமி மற்றும் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
இதனால் 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3 தொடர் கொண்ட டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.