விஜயின் ‘பிகில்’ ட்ரெய்லர் குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் அர்னால்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பிகில்’. நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர் டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. இந்த ட்ரெய்லர் வெளியான சில மணிநேரங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது. 2 கோடியே 36 லட்சம் 63 ஆயிரத்து 592 பேர் ட்ரெய்லரை கண்டு ரசித்துள்ளனர். விஜய் என்றாலே வைரல்தான். அதுவும் விஜய் நடித்த படத்தின் ட்ரெய்லர் என்றால் சும்மா விடுவார்களா அவரது ரசிகர்கள். வெறித்தனமாக ட்ரெய்லரை வைரல் ஆக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா துறையினரின் பாராட்டையும் தாண்டி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் ‘பிகில்’ படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஸ்ஸல் அர்னால்டு, விஜய்யின் ‘பிகில்’ ட்ரெய்லர் பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘பிகிலாய்ய்ய்ய்! டேய் சீனி மாமா.. எனக்கு தளபதி விஜய் படங்களை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி. ‘பிகில்’ ட்ரெய்லரை முழுக்க ரசித்தேன். ராயப்பன் கதாப்பாத்திரம் இருக்கிறதே அது மாஸ் அவதாரம். யாராவது எனக்கு இரண்டு டிக்கெட்கள் கொடுங்கள் நண்பா” என்று குறிப்பிட்டு உற்சாகமாகி உள்ளார்.
ரஸ்ஸல் அர்னால்டுக்கு தமிழ் நன்றாக தெரியும். இலங்கை அணி முதன்முதலாக டி- ட்வெண்டியில் பங்கேற்ற போது இவர் அணியில் இருந்தார். மேலும் இவர் 2007 ஆண்டு ஓய்வு பெற்றார். தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தவர். ஏகப்பட்ட தகவல்களை இவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.