இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக போட்டியின்றி சவுரவ் கங்குலி தேர்வாக உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதை சீரமைக்க, நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. மேலும் வாரியத்தை நிர்வகிக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நிர்வாகக் குழுவை அமைத்தது. லோதா குழு பரிந்துரைப்படி, மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுவை சவுரவ் கங்குலி இன்று தாக்கல் செய்தார். இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் இவர் போட்டியின்றி பிசிசிஐ தலைவராக தேர்வாக உள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
ஆகவே கங்குலி வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை வரை தான் கங்குலி இந்தப் பதவியில் நீடிக்க முடியும். ஏனென்றால், பிசிசிஐ விதிகளின்படி ஒரு நபர் தொடர்ச்சியாக 6ஆண்டுகள் வரை மட்டுமே நிர்வாக பதவியை வகிக்க முடியும். கங்குலி கடந்த 5ஆண்டுகள் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.