இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி திறம்பட செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் தோனி கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஷேன் வாட்சன் கலந்து கொண்டார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவியர்களின் கேள்விகளுக்கு ஷேன் வாட்சன் பதிலளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வென்றது முக்கியமான நிகழ்வு. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் மீண்டும் டேவிட் வார்னர், ஸ்மித் இணைந்தது அவர்களுக்கு கூடுதல் பலம். இந்திய அணியில் துடிப்பு மிக்க வீரர்கள் இருக்கின்றனர். அடுத்த தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் வந்துள்ளனர்.
தமிழகத்தில் டி.என்.பி.எல். போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்களின் திறமை வெளிப்படுகிறது. இதனால் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்குலி இளமையான நிர்வாகி. அவர் திறம்பட செயல்படுவார். இந்திய அணியில் தோனியின் விளையாட்டு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். அவரது தலைமை பண்பும், போராடும் குணமும் என்னை கவர்ந்தது” என்று கூறினார்.