தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் விளக்கமும், மன்னிப்பும் கோரியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாட்சனுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் ஏராளம்.
பிரபலங்களின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. அதில், ஷேன் வாட்சனும் சிக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யபப்ட்டது. ஆனால் சில மணி நேரத்தில் அது மீட்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரது இன்ஸ்டாகிரம் கணக்கில் சில ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டு இருந்தன. இதுகுறித்து ஷேன் வாட்சன் விளக்கமும் மன்னிப்பும் கோரியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட சட்டவிரோத புகைப்படங்களுக்காக அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். முதலில் எனது ட்விட்டர் கணக்கு வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது. இப்போது இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது இன்ஸ்டாகிராம் மிக விரைவாக உதவ வேண்டும். ஆனால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது" என காட்டமாக தெரிவித்துள்ளார்.