வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.
கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய வங்கதேச அணி, ஆட்டத்தின் 42-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து செய்த தவறை, வங்கதேச வீரர் சாத் உதின் கச்சிதமாக பயன்படுத்தி கோலாக மாற்றினார்.
போட்டியின் 88-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் அடில் கான் பதில் கோல் அடிக்க, ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிந்தது. சொந்த மண்ணில் விளையாடிய இந்திய அணி, தரநிலையில் தன்னை விட 83 இடங்கள் பின்தங்கிய வங்கதேசத்திடம் வெற்றி பெறாமல் டிரா செய்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "இ" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் டிராவும், ஒன்றில் தோல்வியும் அடைந்து 2 புள்ளிகளை பெற்றுள்ளது.