இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள கங்குலிக்கு ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்புக்கு வேறு யாரும் போட்டியிடாததால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இருப்பினும், வரும் 23 ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. அப்போது கங்குலி தலைவர் பதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
கங்குலியின் தேர்வு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே வாழ்த்து செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “உங்களை உருவாக்கியதற்காக மேற்கு வங்கம் பெருமை கொள்கிறது” என அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வாக உள்ளது குறித்து ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு கங்குலியும் பதில் அளித்துள்ளார்.
“நீங்கள் ஒரு தலைவர். மற்றவர்களைவிட அதிகாரமிக்க தலைவர். வருங்கால பிசிசிஐயின் தலைவராக வர இருப்பதற்கு வாழ்த்துகள். நீங்கள் மேலும் முன்னேற நான் உங்களை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக்க நன்றி பஜ்ஜூ.. இந்திய அணி போட்டிகளில் வெற்றி பெற ஒருமுனையிலிருந்து பந்து வீசியது போலவே உங்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.