தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதமடித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற கேப்டன் விராத் கோலி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இடது கை சுழற்பந்து வீச்சாளர் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 12 ரன்களில் பெவிலியின் திரும்பினார். தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 2 விக்கெட்டையும், நார்ட்ஜே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.
பின்னர் ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் நின்று நிதானமாகவும் சரியான பந்துகளை விளாசியும் சரிந்த அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, பீடிட் பந்தை சிக்சருக்குத் தூக்கி, அபார சதமடித்தார்.
இது அவருக்கு 6 வது டெஸ்ட் சதம். இந்த தொடரில் அவர் அடித்துள்ள 3 வது சதம் இது. ரோகித் 102 ரன்களுடனும் ரஹானே 66 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். 47 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.