பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசியுள்ளார்.
இந்தூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் நேற்று முதல்நாளில் பங்களாதேஷ் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளான இன்று மயங்க் அகர்வால், ராகானே, ஜடேஜா சிறப்பாக விளையடினர். மயங்க் அகர்வால் அசத்தலாக விளையாடி இரட்டை சதம்(243) அடித்தார். ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 60(76), உமேஷ் யாதவ் 25(10) ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
மயங்க் அகர்வால் தன்னுடைய 8வது டெஸ்ட் போட்டியிலேயே இரண்டவது இரட்டை சதத்தை அடித்துள்ளார். இதற்கு முன்பு வினோத் காம்ளி 5 டெஸ்ட் போட்டிகளில் இரு இரட்டை சதத்தை அடித்து இருந்தார். பிராட்மேன் முதல் 13 டெஸ்ட் போட்டிகளில்தான் இரண்டு இரட்டை சதங்களை அடித்து இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 76(161) ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். மயங்க் அகர்வால் இதுவரை 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 858 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு இரட்டை சதம், ஒரு சதம், மூன்று அரைசதம் அடித்துள்ளார்.
இன்றையப் போட்டிக்கு பின்னர் பேசிய மயங்க் அகர்வால், “2016 ஆம் ஆண்டில் என்னுடைய மனநிலையை மாற்றினேன். தோல்வி குறித்த என்னுடைய அச்ச உணர்வை கைவிட்டேன். அதன்பிறகு, அதிக அளவில் தாகம் கொண்டு விளையாடினேன். டெஸ்ட் அணியில் இடம்பெற்ற நாளில் இருந்து நான் மகிழ்ச்சியான மனநிலை இருந்தேன். முதல் போட்டியில் மெல்போனில் விளையாடியது சிறப்பன தருணம். அப்போது, அணி தொடரை வெல்ல என்னுடைய பேட்டிங் உதவியாக இருந்ததில் பெரும் மகிழ்ச்சி. அந்த உணர்வு என்னில் குடிகொண்டுவிட்டது. அந்த உணர்வுதான், அணி தொடரை வெற்றிபெற செய்ய வேண்டும் என தூண்டியது.
ஒவ்வொரு பந்தினையும் எதிர்கொள்வது முக்கியமான விஷயமாகும். ரகானே மூத்த வீரர். அவர் எனக்கு களத்தில் ஆலோசனைகளை வழங்கினார். இரண்டு விக்கெட் வீழ்ந்துவிட்டதால தடுப்பாட்டம் ஆட முடிவு செய்தோம். ஆனால், ஒரேடியாக தடுப்பாட்டம் கூடாது என்றும் நினைத்தோம். நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுப்படுத்த வேண்டும். அதனால், பந்தினை நன்றாக கணித்து விளையாடினேன்” என்று கூறியுள்ளார்.