தோனியின் எதிர்காலம் குறித்து தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்பு, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. உலகக் கோப்பைக்கு பின், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்றார். அதன் பிறகு நடைபெற்ற எந்த தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், தோனி அடுத்து எந்த தொடரில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள ஐபிஎல் தொடர் வரை பொறுத்திருக்க வேண்டும் என தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரியிடம், தோனியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்த ஐபிஎல் தொடர் முடியும் வரை பொறுத்திருங்கள் என ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். ஐபிஎல் தொடர் முடியும் போது, இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கப் போகும் 15 வீரர்கள் யார் யார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிடும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இதன்மூலம், அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 தொடரில் தோனியை சேர்ப்பது குறித்து இந்திய அணி இரண்டு விதமான மனநிலையுடன் உள்ளது தெரியவருகிறது.