2020 ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பு தோனி கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்பு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்கவில்லை. இதனால் தோனி மீண்டும் எப்போது கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தோனி, ஜார்க்கண்ட் மைதானத்தில் பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இந்தத் தொடருக்கான அணியிலும் தோனி இடம்பெறவில்லை.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷில் ஆசியா லெவன் அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்டு லெவன் அணிக்கும் இடையே இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ஆசிய கிரிக்கெட் அணிகளை சேர்ந்த வீரர்கள் ஆசிய அணியில் இடம்பெற உள்ளனர். இதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சார்பாக சில இந்திய வீரர்கள் விளையாட அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதன்படி தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆசிய லெவன் அணியில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிசிசிஐ அனுமதி கொடுக்கும் பட்சத்தில் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாக மீண்டும் தோனி கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.