இலங்கை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர் கடந்த காலங்களில் சந்தித்த சர்ச்சைகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
கிரிக்கெட் உலகையே தனது பந்து வீச்சால் கட்டி ஆண்டவர் முத்தையா முரளிதரன். 1992-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், தொடக்க போட்டிகளிலேயே அனைவரின் கவனத்தையும் பெற்று விட்டார். வித்தியாசமான ஆக்ஷனுக்கு சொந்தக்காரரான முரளிதரனுக்கு, அவரின் பந்துவீச்சே முதல் சர்ச்சைக்கு வித்திட்டது எனலாம்.
விதிமுறைகளை மீறி, அவர் முழங்கையை அதிகளவில் சுழற்றி பந்து வீசுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதனால்தான், அவர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதாகவும் விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன. பல்வேறு சோதனைகள் மேற்கொண்ட பின், அவர் பந்துவீச ஐசிசி அனுமதித்தது. எனிலும், அவரின் பந்துவீச்சு குறித்து எழுந்த சர்ச்சைகள் ஓயவில்லை என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் வாதமாகும்.
கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னரும், சர்ச்சைகள் அவரை விட்டு விலகவில்லை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமாக தினம் என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஒரு தமிழராக இருந்து கொண்டு, முரளிதரன் இவ்வாறு கூறலாமா? என அவர் மீது பல்வேறு சாடல்கள் எழுந்தன. இந்நிலையில், விடுதலைப்புலிகள் குறித்து, தான் கூறிய கருத்து திரித்து வெளியிடப்பட்டதாக முரளிதரன் மறுத்தார்.
2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னரே, இலங்கையில் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை உருவானதாக முரளிதரன் குறிப்பிட்டார். உள்நாட்டு போரின் போது, ராணுவ தளபதியாக செயல்பட்ட கோட்டாபய ராஜபக்சே, தற்போது அதிபராக பொறுப்பேற்ற பின், முரளிதரன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுழற்பந்து வீச்சில் மாயாஜாலத்தை நிகழ்த்திய முத்தையா முரளிதரன், வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவாராயின், அரசியலில் மாயாஜாலத்தை நிகழ்த்துவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.