உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தில் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் இடையிலான கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மைதானம் அகமதாபாத்தின் மொட்டேரா பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தின் பணிகள் தற்போது முடியும் தருவாய் உள்ளன. இந்த மைதானம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் பெரிய மைதானத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை முதல் போட்டியாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு ஐசிசி ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறும்.
கிரிக்கெட் உலகில் தற்போது மிகப் பெரிய மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் 90 ஆயிரம் மக்கள் அமர்ந்து பார்க்க கூடிய வசதி உள்ளது. இதனை முறியடிக்கும் விதமாக அகமதாபாத் மைதானம் அமைய உள்ளது. இந்தப் புதிய மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் மக்கள் அமர்ந்து பார்க்க கூடும் வகையில் உள்ளது. இந்த மைதானம் 63 ஏக்கர் பரப்பளவில் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.