இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை விட, ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.
ஸ்மித், வார்னர் இல்லாத நிலையில் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ’இந்த தொடரில் உஸ்மான் கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘ஸ்மித், வார்னர் இல்லாத நிலையில் அவர்களது இடத்தை கவாஜா நிரப்புவார். ஆஸ்திரேலிய மண்ணில் கவாஜா வின் ரெக்கார்ட் சிறப்பாக இருக்கிறது. அதனால் இந்த தொடரில் விராத் கோலியை விட அதிக ரன்கள் குவிப்பவராகவும் தொடர் நாயகனாகவும் அவர் இருப்பார். கடந்த 4 வருடத்துக்கு முன் இந்திய அணி, ஆஸ்திரேலியா வந்தபோது, விராத் கோலி, அதிக ரன்கள் குவித்திருக்கிறார். அவர் சிறப்பாக விளையாடுபவர்தான். இருந்தாலும் இந்த தொடரில் கவாஜா சிறப்பாக செயல்படுவார்’ என்றார்.