தனது விக்கெட்டை இழக்க, புதிது புதிதான வழிமுறைகளை கே.எல்.ராகுல் கண்டுபிடிக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.
இதற்கிடையே, இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று காலை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்தப் போட்டியில் பிருத்வி ஷா, புஜாரா, விராத் கோலி, ராஹானே, விஹாரி ஆகியோர் அரை சதம் அடித்தனர். ஆனால், தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இது இந்திய அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரை கோபத்தில் ஆழ்த்தியது.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘ராகுல் நல்ல நிலையில் இருக்கிறார். ஆனால் புதிது புதிதான வழிமுறைகளை கண்டுபிடித்து ஆட்டமிழப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் கூட விலகிச் சென்ற பந்தை தேடி போய் அடித்து, தேவையில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் ஃபார்முக்கு வர ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். அவரது திறமை எங்களுக்கு தெரியும்.
அவர் களத்தில் முழு திறமையை வெளிக்காட்டி ரன்கள் குவிப்பது அணிக்கு அவசியம். அவர் இன்னும் இளம் வீரர் அல்ல. ஆஸ்திரேலியாவுக்கு 2 வது முறையாக வந்துள்ளார். 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவருக்கும் பொறுப்பு இருக்கிறது. அதை உணர்ந்து விளையாட வேண்டும்’ என்றார்.