இந்திய அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய லெவன் அணி அபாரமாக ஆடி, 544 ரன்கள் குவித்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6 ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.
இதற்கிடையே, இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் தொடங்கியது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா, புஜாரா, ரஹானே, கோலி, விஹாரி ஆகிய ஐந்து வீரர்கள் அரைசதம் அடித்தனர். தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை அமர்க்களமாக எதிர்கொண்டது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அவர்கள் ’தண்ணி’ காட்டினர். இந்திய தரப்பில் கேப்டன் விராத் உட்பட 10 பேர் பந்துவீசியும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 544 ரன்கள் குவித்தது. டியார்ஸி ஷார்ட், பிரியன்ட், ஹார்டி ஆகியோர் அரைசதம் அடித்தனர். விக்கெட் கீப்பர் நீல்சன் சதம் அடித்தார். அவரது விக்கெட்டை விராத் கோலி வீழ்த்தினார்.
முகமது ஷமி 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விராத் கோலி, பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் ஆடி வருகின்றனர். இது,கடைசி நாள் போட்டி என்பதால் டிராவில் போட்டி முடியும்.