கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜூடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நீட்டிக்கவில்லை.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின், ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மிதாலி ராஜ். அனுபவ வீராங்கனையான இவர், சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸி ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார். முதல் இரண்டு போட்டியில் அரைசதம் அடித்திருந்த அவரை, முக்கியமான அரையிறுதி போட்டியில் அணியில் சேர்க்காமல் உட்கார வைத்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மிதாலி ராஜின் மானேஜர், இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டார். ’டி20 அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சூழ்சிக்காரர், பொய் சொல்கிறார், கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாதவர்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவார், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. அதில், தனது புகழை ரமேஷ் பவார் முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார் என்றும் தன்னை அவமானப்படுத்தினார் என்றும் கூறியிருந்தார் மிதாலிராஜ்.
ரமேஷ் பவார், ‘பேட்டிங் வரிசையை மாற்றினால் கிரிக்கெட்டு முழுக்கு போடுவேன்’ என்று மிதாலி ராஜ் மிரட்டியதாக புகார் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலம் நேற்றோடு முடிந்துவிட்டது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்ததாகவும் மிதாலியுடனான பிரச்னை காரணமாக கடும் அதிருப்திக்குள்ளான வாரியம், அவர் பதவியை நீட்டிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, டேவ் வாட்மோர், இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் இந்தப் பதவிக்கு ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.