விராட் கோலி இரண்டு ஓவர்கள் பந்துவீசியது தொடர்பாக பேசிய அஸ்வின் கிண்டலடித்து பின்னர் பொறுப்பான பதில் கூறினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய 11 சிறப்பு அணி இடையேயான பயிற்சி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 4 நாட்கள் கொண்ட இந்தப் போட்டி கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. நாளையுடன் நிறைவடைகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய 11 அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் பிருத்வி ஷா 66 (69), புஜாரா 54 (89), விராட் கோலி 64 (87), ரஹானே 56 (123), ஹனுமா விஹாரி 53 (88), ரோகித் ஷர்மா 40 (55) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதையடுத்து முதன் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய 11 அணி 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் ஆர்சி ஷார்ட் 74 (91), மேக்ஸ் ப்ரியாண்ட் 62 (65), ஜேக் கார்டெர் 38 (139), சாம் வொயிட்மேன் 35 (55) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது ஹர்ரி நெல்சன் 56 (106) மற்றும் ஆரோன் ஹார்டி 69 (121) ரன்களுடன் களத்தில் உள்ளனர். மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில் நாளை இறுதி நாள் ஆட்டத்தை அந்த அணி ஆடவுள்ளது. போட்டி நாளையுடன் நிறைவு பெறுவதால் ஆட்டம் சமனில் முடியும் என்பது தெரியவந்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அனைவரும் களைப்பாக இருந்த நேரத்தில், கேப்டன் விராட் கோலி இரண்டு ஓவர்கள் பந்துவீசினார். விராட் கோலி பந்து வீசுவது கிரிக்கெட்டில் மிகவும் அறிதான சம்பவம். 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இதுவரை 27 ஓவர்கள் மட்டுமே பந்துவீசியுள்ளார். இந்நிலையில் இன்று இரண்டு ஓவர்கள் வீசிய கோலி, 6 ரன்கள் கொடுத்தார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் ஒரு விக்கெட் கூட அவர் எடுக்கவில்லை.
கோலி பந்துவீசியது தொடர்பாக பேசிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், “பந்துவீச்சாளர்கள் எல்லாம் எப்படி பந்துவீச வேண்டும் என்று பாடம் எடுக்கும் வகையில் கோலி பந்துவீசினர் என நினைக்கிறேன்” என்று சிரித்தபடி கிண்டலாக சொன்னார். பின்னர் உடனே சீரியஸாக முகத்தை மாற்றிக்கொண்டு, “விளையாட்டாக கூறினேன். அந்த நேரத்தில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் களைப்பாக இருந்ததால் கோலி இரண்டு ஓவர்கள் வீசினார்” என்று கூறினார்.