இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணத்தில் விலங்குகளை துன்புறுத்தியாக பீட்டா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழில், விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, தன்னை விட 10 வயது குறைந்த, அமெரிக்க பாப் பாடகரும் நடிகரு மான நிக் ஜோனாஸை காதலித்தார்.
இவர்கள் காதலுக்கு இரண்டு பேர் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் திருமணம் ஜோத்பூரில் சனிக்கிழமை நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு மதங்களின் வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர்.இதில் இந்தி நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர் கள், தொழில் அதிபர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் திருமணம் முடிந்ததும் அரண்மனை முன்னால் வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ச்சியாக பட்டாசுகளை வெடித்ததால் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது. உச்சநீதிமன்றம் பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இப்படி செய்தது நியாயமா என எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சமூக வலைத்தளத்தில் பலரும் இதை கண்டித்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்த திருமணத்தில் யானைகள், குதிரைகள் துன்புறுத்தப்பட்டதாக, விலங்குகள் நல அமைப்பான ’பீட்டா’ நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது.
‘உங்கள் திருமணத்தில், யானைகள் சங்கியால் பூட்டப்பட்டிருந்தன. குதிரைகள் சவுக்குகளால் துன்புறுத்தப்பட்டன. திருமணத்தில் குதிரை களையும் யானைகளையும் மக்கள் தவிர்த்து வருகிறார்கள். வாழ்த்துகள், ஆனால், விலங்குகளுக்கு அன்று மகிழ்ச்சியான நாளாக இல்லை என்பதற்காக வருந்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.