பட்டியலின கட்சிகள் மற்றும் அமைப்புகள் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஞ்சித், வாக்களித்த பட்டியலின மக்களுக்காக எம்பி, எம்எல்ஏகள் பேச வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பட்டியல் சமூகத்திற்காக பேசினால் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அச்சப்படும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கட்சியிலிருந்து வெளியே வந்தால், தாங்கள் அவர்களை தேர்தலில் வெற்றிபெற வைக்கிறோம் என்றார்.
மேலும், “தனித்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலின மக்களின் பிரச்னைகள் பற்றி பேச வேண்டாமா?. நம் பிரச்னைகளைப் பற்றி பேசுபவர்களை நாம் தேர்ந்தெடுப்போம். 234 தொகுதிகளிலும் உழைக்க வேண்டாம்; 7 நாடாளுமன்ற தனித் தொகுதிகளில் உழைப்போம். பட்டியலின அமைப்புகளுக்குள் கூட்டணியை உருவாக்குவோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பட்டியலின அமைப்புகளைத் தேர்ந்தெடுப்போம்” என்று அவர் பேசினார்.