விஸ்வாசம், பேட்ட திரைப்படங்கள் பொங்கல் பண்டிகை விருந்தாக முன் கூட்டியே இன்று அதிகாலை திரையரங்குகளில் வெளியானது. இந்த இரு படங்களையும் ரசிககர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை 3 மணி காட்சி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது. ஒரே தியேட்டரின் இரண்டு ஸ்க்ரீன்களிலும் விஸ்வாசம், பேட்ட படங்கள் ரிலீஸானதால், ஒவ்வொரு திரையரங்கும் விழாக்காலம் பூண்டிருந்தது. இதில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் 1 மணிக்கு திரையிடப்பட்டது. இதன் பின்பு 3 மணியளவில் ரஜினிகாந்தின் "பேட்ட" படம் திரையிடப்பட்டது.
இதில் சென்னை காசி திரையரங்களில் பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களோடு இணைந்து பார்ந்தார். அப்போது பேசிய அவர் " பேட்ட திரைப்படம் ஒவ்வொரு ரசிகரும் ரசித்து பார்க்க கூடிய படமாக இருக்கும். ஒரு ரசிகனாக இன்ஸ்பையர் ஆகி உருவாக்கப்பட்ட படம். காசி திரையரங்கில் லிங்கா திரைப்படத்தை ஒரு ரசிகனாக கைதட்டி ரசித்து பார்த்தேன். இன்று அவரின் படத்தை இயக்கியுள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த்த திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் என உறுதியாக நம்புகிறேன். நானும் எனது குழுவும் பயணித்த மறக்க முடியாது அனுபவம்" என்றார் அவர்.
முன்னதாக கார்த்திக் சுப்ராஜை அவருடைய அலுவலகத்தில் இருந்து மேள தளத்துடன் காசி திரையரங்கிற்கு ரசிகர்கள் அழைத்துவந்தனர்.ரஜினிகாந்த் குடும்பத்தினர் அனைவரும் ரோகினி திரையரங்கில் சிறப்புக் காட்சியை பார்த்தன,ர். கோயம்பேடு ரோகினி திரையரங்களில் ரஜினிகாந்த்தின் பேட்ட திரைப்படத்தின் பேனபை, அஜித் ரசிகர்களால் கிழித்ததால் அங்கு கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் திரையரங்கில் விஸ்வாசம் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்படாததால் ஆவேசமடைந்த ரசிகர்கள் பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது.
விவேகம் படத்தின் தோல்விக்கு பின்பு இயக்குநர் சிவாவுடன் 4வது முறையாக அஜித் கூட்டணி வைத்த படம் விஸ்வாசம். படம் தொடங்கியபோது அஜித்தின் கெட்டப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய மீசை, தூக்குதுரை என்ற பெயர் விஸ்வாசம் ஒரு கிராமத்து பின்னணியில் உருவாகும் திரைப்படம் என உறுதியாகியது. பக்கா கிராமத்து கமர்சியல் படமாக விஸ்வாசம் உருவாகியுள்ளதாக சிறப்புக் காட்சியை பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் விஸ்வாசம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா நடிப்பு, டி.இமானின் பின்னணி இசை விஸ்வாசத்துக்கு பலம் சேர்ப்பதாக இருப்பதாக திரை வட்டாரங்களின் பேச்சாக இருக்கிறது.
பேட்ட படத்தில் த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா என மல்டி ஸ்டார்ஸ் படமாக இருக்கிறது பேட்ட. ரஜினிக்கு துணை நிற்பார்கள் என்ற பேச்சு இருந்தாலும். எத்தனை பேர் இருந்தாலும் ரஜினி எனும் ஒற்றை திரை ஆளுமை கூட நடித்தவர்களை ஓரம்கட்டி விடும். அதேபோல, எதிலும் புதுமையும் துணிச்சலும் கொண்ட நடிகர் அஜித், ரஜினி எனும் மாபெரும் சகாப்தத்தை எதிர்த்து இம்முறை நேரெதிர் போட்டியிட்டுள்ளார் தனது படத்தின் மூலமாக. எனவே, இந்தப் பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு "தல" பொங்கலாகவும், ரஜினி ரசிகர்களுக்கு "தலைவர்" பொங்கலாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.