தனது நடிப்பில் வெளிவந்து தோல்வியடைந்த தெலுங்கு படத்தின் சம்பள பாக்கியை வேண்டாம் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்த சாய்பல்லவி 2008-ம் ஆண்டு தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக 2008-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த‘தாம் தூம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இதையடுத்து மலையாளத்தில் வெளியான‘பிரேமம்’ படம் மூலமாக சினிமாவில் முதலில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அதன் பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனுஷுடன் இணைந்து நடித்த ‘மாரி 2’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் அள்ளியது. அதே நாளில் தெலுங்கில் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஷ்ரவானந்த், சாய்பல்லவி நடிப்பில் ‘படி படி லேச்சு மனசு’ என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப்படம் அவ்வளவாக வசூலை அள்ளவில்லை.
இந்தப் படம் ரூ.22 கோடிக்கு வியாபாரமாகி ரூ.8 கோடிக்கு மட்டுமே வசூல் ஆனதாக தெரிகிறது. இதையடுத்து பேசப்பட்ட சம்பளப்பணத்தில் பாதியை கொடுத்துவிட்டு மீதி பணம் ரூ. 40 லட்சத்தை படம் ரிலீசுக்கு பிறகு தருவதாக சாய்பல்லவியிடம் தயாரிப்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி தயாரிப்பாளர் மீதி பணத்தை கொடுக்க முன்வந்தபோது சாய் பல்லவி அதை வாங்க மறுத்துள்ளார்.
மேலும் படத்தின் தோல்விக்கு தானும் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். சாய் பல்லவியின் இந்தச் செயல் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.