எந்தவொரு சினிமா குடும்ப பின்னணியும் இல்லாமல் தனது திறமை மூலம் கோலிவுட் திரையுலகில் தனக்கென இடம்பிடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்த நாள்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தான் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த ஊர். தன
து 11-வது வயதில் குடும்பத்தோடு சென்னைக்கு இடம்பெயர்ந்த விஜய் சேதுபதியின் பள்ளி, கல்லூரி காலம் கழிந்தது எல்லாம் சென்னையில் தான். கைச்செலவுக்காக கிடைத்த வேலைகளை செய்து வந்த விஜய்சேதுபதி, துபாயில் கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார். ஒருகட்டத்தில் பணியில் நாட்டமில்லாமல் சென்னை திரும்பிய விஜய்சேதுபதி, அதன்பின்பு தான் கலையுலக பக்கத்தை எட்டிப்பார்த்தார். இப்போது இருக்கும் புகழ், மக்களின் அன்பு எதுவே அவருக்கு உடனடியாக கிடைக்கவில்லை. அலைந்து, திரிந்துதான் அனைத்தையும் பெற்றதாக பேட்டி ஒன்றில் அவரே கூறியிருக்கிறார்.
சினிமாவில் பின்னால் தோன்றும் நடிகராகவே விஜய் சேதுபதியின் ஐந்தாண்டு காலம் கழிந்தது. ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். ‘சூது கவ்வும்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என ஒவ்வொரு படங்களிலும் தனிமுத்திரை பதித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் தான் நடிப்பேன் என்றில்லாமல் ஒருவருடத்தில் கிட்டத்தட்ட 7 படங்கள் வரை நடித்தார். நடிப்பும், நேரமும் நன்றாக இருந்தால் மக்களும் அவரை கொண்டாட துவங்கினர்.
நம் பக்கத்து வீட்டில் ஒரு பையன் இருந்தால் எப்படி இருப்பானோ அதுபோன்ற இயல்பானதொரு முகம், கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பு, பளிச் கண்கள், எந்வொரு கேரக்டருக்கும் பொருந்திப்போகும் நடிப்பு என ஒரு கலைஞருக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் நன்றாக பொருந்திப் போவது விஜய் சேதுபதியை மக்களுக்கு அதிகம் பிடிக்க காரணமாக இருக்கிறது. வில்லனாகட்டும், எதிரிகளை அடித்து நொறுக்கும் கம்பீர போலீசாகட்டும், காதல் என்று வந்தால் கண்களால் பேசுவதாகட்டும், என அனைத்திலுமே தன் நடிப்பை மக்களுக்கு பிடிக்கும் வகையில் வெளிப்படுத்துகிறார். பேட்டிகள், நிகழ்ச்சிகள் என அனைத்திலும் எந்தவித கெத்தும் இல்லாமல் அவர் சாதாரணமாகத் தான் இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் எப்போதுமே அவரை கெத்தான நடிகராகத் தான் பார்க்கின்றனர்.
நடிகருக்கு பின்னால் தோன்றியதில் இருந்து இன்று ‘பேட்டை’யில் ரஜினியுடன் வில்லன் ஆனது வரை விஜய்சேதுபதியின் வளர்ச்சி பெரிதானது. இந்நிலையில் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவேற்றியும் ரசிகர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் #HappyBirthdayVijaySethupathi, #HBDMakkalSelvanVJS ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.