பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் தான் அவதூறாக பேசியதும் இல்லை பேசவும் மாட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சமூக பிரச்னைகளுக்கு அவ்வபோது குரல் கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி. நேரடியாக தனது குரலை பதிவு செய்யமுடியாவிட்டாலும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலம் அடிக்கடி தன் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிப்ரவரி 6-ம்தேதி தமிழக காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். திருடப்பட்ட செல்போனை கண்டுபிடிக்க ஏதுவாக ‘டிஜிகாப்’ என்ற செல்போன் செயலி அந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது பேசிய விஜய் சேதுபதி, ’’செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும்’’ என்று தெரிவித்தார்.
விஜய் சேதுபதியின் இந்த கருத்தை செய்தி தொலைக்காட்சி ஒன்று செய்தி அட்டையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்தது. அந்த செய்தி அட்டையை எடுத்துக்கொண்ட சிலர் போட்டோஷாப் மூலம் அதை மாற்றி ''பகவத்கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இது போன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம்'' என சமூக வலைதளங்களில் பரப்பினர்.
அந்த போலி செய்தி வைரலாக பரவ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் உண்மை தன்மை தெரியாமலேயே பலரும் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் ''பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.