நடிகர் சிரஞ்சீவியின் ஆஸ்தான இயக்குநரான விஜயா பாப்பிநீடு என்கிற குத்தா பாப்பிநீடு சவுத்ரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.
1936ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார் விஜயா பாப்பிநீடு. பத்திரிகை எழுத்தாளராக தனது பணியை தொடங்கிய இவர், சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவருடைய ஒரு நாவல் ஜகத் ஜடேலு என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே விஜயா பாப்பிநீடு வெளி உலகிற்கு அதிகம் அறியப்பட்டார். ‘கேங் லீடர்’,‘கில்லாடி நம்பர் 786’,‘மஹாதீருடு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இவர் இயக்கியுள்ளார்.
விஜயா பாப்பிநீடு தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் ஆஸ்தான இயக்குநர் ஆவார். சிரஞ்சீவியின் பல வெற்றிப்படங்களை இவர் இயக்கியுள்ளார். சிரஞ்சீவிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்தவரும் இவரே. விஜயா பாப்பிநீடு இயக்கிய ‘கேங்க் லீடர்’ சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. அந்தத் திரைப்படம் சிரஞ்சீவின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது.
சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயா பாப்பிநீடு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயக்குநர் விஜயா பாப்பிநீடுவின் இறுதிச்சடங்கு நாளை ஹைதாராபாத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.