ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு ‘நாற்காலி’ என தகவல்கள் பரவியது. ஆனால் அதற்கு முருகதாஸ் மறுப்பு தெரிவித்தார்.
இதற்கிடையே படத்துக்கான முதற்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் 166 படமான இந்த திரைப்படத்தில் காவல் அதிகாரியாகவும், இன்னொரு கதாபாத்திரத்தில் சமூக சீர்த்திருத்தவாதியாகவும் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ அரசியல் சார்ந்த வசனங்களையும் கதைக்கருவையும் உள்ளடக்கி இருந்தது. இந்நிலையில் ரஜினி உடனான படத்திலும் அவரின் அரசியல் பயணத்துக்கு ஏற்ப கதைக்கருவை முருகதாஸ் அமைத்திருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.