வெளியில் வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தாலும் சமூக வலைத்தளம் பக்கம் போனால் ''வின்டர் ஈஸ் கம்மிங்’’என்று பதிவிட்டு வருகிறது ஒரு குரூப். என்னது வின்டரா? என்று உள்ளே சென்று பார்த்தால் அது ''கேம் ஆஃப் த்ரோன்ஸ்'' 8வது சீசன் வெளியீடு தான் காரணம் என்று புரிகிறது.
GOT என்று சுருக்கமாக அழைப்படுகிறது ''கேம் ஆஃப் த்ரோன்ஸ்'' (Game of Thrones). ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே கதை. ஆனால் நாம் நினைக்கும் எதுவுமே கதையில் நடக்காதவாறு எதிர்பாரா திருப்பங்களும், புதிய புதிய கதை நகர்வுகளுடன் செல்வதே கேம் ஆப் த்ரோன்சின் வெற்றி. 1991ம் ஆண்டு ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டது.
முதல் பாகம் 2011ம் ஆண்டு வெளியாகி உலக ரசிகர்களை ஈர்த்தது. ஒவ்வொரு சீசனும் 10 பாகங்கள் கொண்டது. மொத்தம் இதுவரை 7 சீசன்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இறுதி சீசனான 8வது சீசனின் முதல் எபிசோட் இன்று வெளியாகியுள்ளது. வின்டர் சீசனாக வெளியாகியுள்ள இந்தப் பகுதிக்காக GOT ரசிகர்கள் நீண்டநாட்களாகவே காத்திருந்தனர்.
இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு வெளியான எபிசோட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை காலை அடுத்தடுத்த எபிசோட்கள் வெளியாகவுள்ளன.
இணையம் முழுவதும் வின்டர், GOT என மீம்கள் குவிந்து வருகின்றன. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GameofThrones என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.