கொடைக்கானல் அருகிலுள்ள பூம்பாறை கிராமத்துத்தில் வசிக்கும் இளைஞர்களின் கைகூடா காதல்களை, இளையராஜாவின் இசையால் இணைத்து வைக்கிறார் ராஜகீதம் ஜீவா. அந்த ஊருக்கு சர்க்கஸ் போட வரும் மெஹந்தி, ‘ஓ பாப்பா லாலி’ என அவருக்குள் இசையாய் நிறைகிறார். இருவருக்குள் இடையில் தடையாகிறது சாதியம். காதல், பிரிவு, போராட்டம் என எல்லாவற்றையும் தாண்டி மெஹந்தியும், ஜீவாவும் இணைகிறார்களா? என்பதே திரைப்படம்.
ஒரு ஆடியோ கேசட் கடை நடத்தும் நாயகனுக்கும், சர்க்கஸ் குழுவின் நாயகிக்கும் இடையிலான காதல் என்பதே தமிழ் சினிமா இதுவரை கண்டிராதது. அந்த முதல் புள்ளியிலேயே ரசிக்க வைக்கிறார் இயக்குநர் சரவணன் ராஜேந்திரன். அதற்குள், 90களில் இளையராஜா ஏற்படுத்திய தாக்கம், காதலின் மகத்துவம், சாதியக் கட்டமைப்பு, சர்க்கஸ் தொழிலின் அழிவு எனப் பலவற்றையும் காட்சிகளாக விரித்திருக்கிறார். அத்தோடு, மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையை பிரதான கதாபாத்திரமாக்கியிருக்கிறார் இயக்குநர். நாயகன் ஜீவா, நாயகி மெஹந்தியை சந்திக்கும் முதல் காட்சியில் தொடங்கி அந்த இசையின் எல்லாமுமாக ஒலிக்கிறது. அதுவே இந்தப் படத்தை ஒரு நெடும் கவிதையாகவும் மாற்ற முயற்சிக்கிறது.
நாயகன் ஜீவாவாக அறிமுக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். அந்தக் கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற உடல்மொழியோடு, பார்வை எனப் பொருந்துகிறார். அதே நேரம், காட்சிகளுக்குகேற்ப நடிக்க சிரமப்படுகிறாரோ? என்றும் தோன்ற வைக்கிறது. டைட்டில் ரோலில், மெஹந்தியாக அசத்துகிறார் நாயகி ஸ்வேதா திரிபாதி. அந்த இந்திப் பாடலை திரும்பவும் ஒலிக்கச் சொல்லும்போதும், நாயகன் கத்தி வீசப் போகும் போதும், ‘இது சரியா வராது’ என்று தவிக்கும்போதும் ரசிக்க வைத்து விடுகிறார். சிறப்பான தேர்வு.
ஃபாதர் அமலதாஸ் கதாபாத்திரத்தில் வித்தியாசமாக இருக்கிறார் வேல.ராமமூர்த்தி. ஆர்ஜே விக்னேஷ், மாரிமுத்து, அன்கூர் விகால், சன்னி சார்லஸ், பூஜா என எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசைக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட திரைக்கதையில் ஷான் ரோல்டன் இசை மனம் வருடுகிறது. பல காட்சிகளின் பின்னணி இசையும், பாடல்களும் லயிக்க வைக்கின்றன. அதேபோல், செல்வகுமாரின் ஒளிப்பதிவு அசத்தல். பூம்பாறை அழகை அப்படியே காட்சிகளின் படிமமாக்கியிருக்கிறார். நீளமாக செல்லும் படத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்காலாமோ என தோன்ற வைக்கிறது பிலோமின் ராஜின் படத்தொகுப்பு.
மொத்தப் படமும் ஒரு காதலை மையப்படுத்தியது எனும்போது அதை காட்சிகளின் மூலம் எந்தளவுக்கு ரசிகனுக்குள் கடத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்தப் பணியை முழுமையாக திரைக்கதை செய்யவில்லை. அதற்கு, ராஜூமுருகனும், சரவணன் ராஜேந்திரனும் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும்.
இளவரசி, ராஜகுமாரன் கதைப் பாடலோடு தொடங்கும் டைட்டில் கார்டே மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் கவிதையாய் விரியப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறி, ஒரு நல்ல காதல் படத்தை பார்க்கலாம் எனும் நம்பிக்கை இயல்பாய் ஏற்படுகிறது. ஆனால், அந்த நம்பிக்கை நிறைவேறியதா? என்றால் ஆம் என நம்மால் உறுதியாக சொல்ல முடியவில்லை. திரைக்கதையின் வேகம், யூகிக்க முடிந்த காட்சியமைப்புகள், பார்வையாளர்களுக்கு அழுத்தமாக பதியாத நாயகன், நாயகியின் காதல் போன்றவை கண்முன் தோன்றி மறைகிறது. ரசனை மிகுந்த கதையை தேர்வு செய்த படக்குழு, திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் ’மெஹந்தி சர்க்கஸ்’ பார்வையாளர்கள் கைதட்டி, ரசித்து, கண்ணீர் விடும் காவியமாக மாறியிருக்கும்.