சிவகார்த்திகேயனுக்கு மட்டும் வாக்களிக்க சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளத்தில் விவாதம் எழுந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு இருந்தது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை. எனவே அவர் ஓட்டுப்போட செல்லவில்லை. பின்னர் தனது வாக்கினை பதிவு செய்த சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்தார்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் எப்படி வாக்களித்தார் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் அதிகாரிகள், ''சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக் கொண்டு, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் பாகம் 303 வாக்காளர் பட்டியல் வரிசை எண் 703ல் அவரின் பெயர் எழுதப்பட்டு சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால், இந்தச் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது”என்று தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பலரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் குழப்ப நிலையில் செய்வதறியாமல் திரும்பி செல்கின்றனர். நடிகர் ரோபோ சங்கர் இயக்குனர் ரமேஷ் கண்ணா ஆகியோரும் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் சிறப்புச் சலுகை கொடுக்கப்பட்டது எப்படி என்றும், அப்படி ஒரு வாய்ப்பிருந்தால் அனைவருக்கும் அந்த வாய்ப்பை வழங்கலாமே என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.