நடிகர் சிவகார்த்திகேயன் பலகட்ட முயற்சிக்குப் பிறகு தனது வாக்கை அளித்துள்ளார்.
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு இருந்தது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை. எனவே அவர் ஒட்டுப்போட செல்லவில்லை.
பின்னர் சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் பாகம் 303 வாக்காளர் பட்டியல் வரிசை எண் 703ல் சிவகார்த்திகேயன் பெயர் எழுதப்பட்டு வாக்களித்துள்ளார். நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால், இந்த சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்களித்த பின்னர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “வாக்களிப்பது உங்கள் உரிமை; உங்கள் உரிமைக்காக போராடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.