நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி63’ படத்தின் கதை தன்னுடையது எனக் குறுப்பட இயக்குனர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ கூட்டணியில் "தளபதி63" படம் கால் பந்தாட்டத்தை கதைக்களமாக கொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று குறுப்பட இயக்குனர் செல்வா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் கால் பந்தாட்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை உருவாக்கி, தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், குறும்பட இயக்குனரும், திரைப்பட உதவி இயக்குனருமான செல்வா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னுடையை கதையை ஒத்திருப்பதை அறிந்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகவும், அந்தப் புகாரின் மீது ஆலோசனை நடத்திய சங்கம், உறுப்பினராகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே கதை திருட்டு தொடர்பான புகாரை எடுத்துக் கொள்ளமுடியும் எனக் கூறி தன்னுடைய புகாரை அவர்கள் நிராகரித்தாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் ‘தளபதி63’ படத்தின் கதைக்கு உரிமை கோரியும், படப்பிடிப்புக்கு தடை விதிக்க கோரியும் வழக்குத் தொடர்ந்துள்ளார். படத்தின் இயக்குனர் அட்லீ, படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாராக சேர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 23ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.