ரூ.2 கோடி வரை சம்பளம் பேசப்பட்டும், அழகுசாதன விளம்பரத்தில் நடிக்க நடிகை சாய்பல்லவி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலர் டீச்சராக சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் சாய் பல்லவி. சமீபத்தில் வெளியான ‘மாரி2’ திரைப்படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான ‘அதிரன்’திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வெளி நிகழ்ச்சிகளிலும் சரி, திரைப்படங்களிலும் சரி சாய்பல்லவி எந்த ஒரு மேக்அப்பும் போடாமல் இயல்பான தோற்றத்திலேயே இருந்து வருகிறார். மேக்அப் குறித்து கேள்விகளுக்கு பல பேட்டிகளில் பதிலளித்துள்ள சாய்பல்லவி, ''நான் அழகு சாதனங்களை பயன்படுத்துவதில்லை. இயற்கையான நமது தோற்றத்தின் மீது முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ‘அதிரன்’ திரைப்படத்தின் வரவேற்பை பார்த்த புகழ்பெற்ற அழகுசாதன நிறுவனம் சாய் பல்லவியை விளம்பரத்தில் நடிக்க தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அழகு சாதனங்களை பயன்படுத்தாத தான் அது தொடர்பான விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் எனக்கூறி சாய்பல்லவி வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவும், மேலும் இந்த விளம்பரத்துக்காக ரூ.2 கோடி வரை சாய்பல்லவிக்கு சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.