ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக், மும்பையில் நாளை தொடங்குகிறது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ’காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது. இது ’முனி’யின் நான்காம் பாகம். இதில் லாரன்ஸூடன் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி, கோவை சரளா, நெடுமுடி வேணு உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதையடுத்து ராகவா லாரன்ஸ், தனது ’காஞ்சனா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். ’காஞ்சனா’வில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழில் மெகா ஹிட்டான இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இந்திக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தமிழில் வெளியான ’காஞ்சனா’வில் பேயை கண்டு நடுங்குபவராக லாரன்ஸ் நடித்திருப்பார். இந்தி ரீமேக்கில் பேயை நம்பாத வராகவும் பேயை கண்டு பயம் கொள்ளாதவராகவும் அக்ஷய்குமார் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் மனைவியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ’காஞ்சனா’வில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டர் முக்கியமான ஒன்று. அந்த கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மும்பையில் நாளை தொடங்குகிறது. இந்தப் படத்துக்கு ’லட்சுமி’ என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர்.