பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
1952 அக்டோபர் 16 ஆம் தேதி பிறந்த கிரேஸி மோகனுக்கு பெற்றோர் வைத்த பெயர், மோகன் ரங்காச்சாரி. மாணவப் பருவத்திலேயே நகைச்சுவை உணர்வுடன் வளர்ந்த அவர், பொறியியல் பட்டதாரி. அவருக்கு இருந்த நகைச்சுவை உணர்வைக் கண்டு பாராட்டிய நண்பர்கள், அவரை நாடகங்களை எழுதத் தூண்டினர். கல்லூரியில் கிரேட் பேங்க் ராபரி என்ற நாடகம் எழுதி நடித்த அவருக்கு சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர் விருதுகள் கிடைத்தன.
மெக்கானிக்கல் இன்ஜினியர் பட்டம் பெற்ற பிறகு, சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய மோகன், மற்ற நிறுவனங்களுக்கு நாடக வசனம் எழுதத் தொடங்கினார். 1976ஆம் ஆண்டு நாடகப்ரியா நிறுவனத்துக்கு பாலவாக்கத்தில் கிரேஸி திருடர்கள் என்ற பெயரில் இடம்பெற்ற அவரது நாடகத்துக்கு கிடைத்த வரவேற்பால், மோகனின் பெயருடன் கிரேஸி என்ற பட்டம் ஒட்டிக் கொண்டது.
தனது எழுத்தார்வத்தால் 1979ஆம் ஆண்டு கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நாடகக் கம்பெனி தொடங்கினார். தனது சகோதரர் மாது பாலாஜியை கூட்டு சேர்த்து நாடக கம்பெனியை வளர்த்தார் மோகன். 30 நாடக வசனங்களை எழுதிய கிரேஸி மோகன், 6 ஆயிரத்து 500க்கு மேல் அந்த நாடகங்களை நடத்தியுள்ளார். அவரது ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் மூன்றே ஆண்டுகளில் 500 முறை போடப்பட்டு சாதனை படைத்தது.
கிரேஸி மோகனின் நகைச்சுவை எழுத்தாற்றலைக் கண்ட இயக்குநர் கே.பாலச்சந்தர், தனது ‘பொய்க்கால் குதிரை’படத்தில் வசனகர்த்தாவாக வாய்ப்பு அளித்தார். முடிதிருத்தகத்தில் நிச்சயமான திருமணம் என்ற கிரேஸி மோகனின் நாடகத்தைதான் கே.பாலச்சந்தர் ‘பொய்க்கால் குதிரை’ என்ற பெயரில் படமாக எடுத்தார்.
கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்த பிறகு, அவரது பல படங்களுக்கு வசனகர்த்தாவான கிரேஸி மோகன், அந்தப் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். ‘அபூர்வ சகோதரர்க’ளில் தொடர்ந்த நட்பு, ‘மைக்கேல் மதன காமராஜன்’,‘மகளிர் மட்டும்’,‘இந்திரன் சந்திரன்’,‘சதிலீலாவதி’,‘அவ்வை சண்முகி’,‘பம்மல் கே சம்பந்தம்’,‘பஞ்சதந்திரம்’,‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ என நீண்டது.
‘ஆஹா’,‘நான் ஈ’ உட்பட மற்றவர்களின் படங்களுக்கும் கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார். அண்மையில்கூட அவர் தனது நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.