இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் ஆகியோரை நாகரீகமற்ற வார்த்தையால் நடிகர் வடிவேலு பேசியிருப்பது கண்டனத்துக்கு உரியது’’ என்று இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
வடிவேலு ஹீரோவாக நடித்த ’இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தை இயக்கியவர் சிம்புதேவன். ஷங்கர் தயாரித்திருந்த இந்தப் படம் மெகா ஹிட்டானது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருந்தார் சிம்புதேவன். ஷங்கர் தயாரிக்க இருந்தார். படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் தொடங்கிய நிலையில் வடிவேலுவுக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி நடிகர் சங்கத்தில், இயக்குனர் ஷங்கர் புகார் செய்தார். இந்த படத்தை முடித்துக் கொடுக்காமல் அடுத்த படத்தில் நடிக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் உத்தரவிட்டது.
இந்நிலையில் வடிவேலு அளித்த பேட்டி ஒன்றில், ஷங்கரை கிராபிக்ஸ் இயக்குனர் என்றும் இயக்குனர் சிம்புதேவன் சினிமா தெரியாத, வேலை தெரியாத சின்ன பையன் என்றும் கடுமையாகக் கூறியிருந்தார். இதற்கு இயக்குனர் ’மூடர் கூடம்’ நவீன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நவீன் கூறும்போது, ‘’வடிவேலுவை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டர் சிம்புதேவன்தான். ஏதோ இவரால்தான் புலிகேசி படம் உருவானதுபோல உடான்ஸ் விடுகிறார். அப்படிதான் நடந்தது என்றால், அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜெட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்காதது ஏன்? 22 ஆம் புலிகேசி படத்தின் 2 ஆம் பாகம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இழப்பே.
அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால், அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும் சிம்புதேவனின் அசிஸ்டென்டாகவும் கண்டிப்பேன்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனியும் வடிவேலுவை கண்டித்துள்ளார்.
இதுபற்றி அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''அண்ணன் வடிவேலுவின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டனத்துக்கும் உரியது. சிம்புதேவனின் கிரியேட்டிவ், புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!’’ என்று கண்டித்துள்ளார்.