‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், அஜித் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்று ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜித் நடித்துள்ள இந்தப் படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். படத்தில் அஜித்துடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’கில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியாகிய உடனே அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படையெடுத்தனர். ட்விட்டரில் ‘நேர்கொண்ட பார்வையை’ உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர். இதனால் சமூக வலைத்தளங்களை திறந்தால் பெரும்பாலும் ‘நேர்கொண்ட பார்வை’ செய்தியாகவே இருந்தது. அறிவித்ததைப் போலவே 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது.
ட்ரெய்லர் தொடங்கும் போதே மறைந்த நடிகை ஸ்ரீதேவி புகைப்படத்துடன் ‘நீங்கா நினைவுகள்’ என ஆரம்பித்தது. அஜித் புகைப்படத்தை மட்டுமே அனைவரும் பார்த்திருந்தல், அஜித்தின் தோற்றம் மற்றும் பேசும் முறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது.
அஜித் தோற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது மூக்கு கண்ணாடிதான் என்பதை உணர்த்தும் வகையில் அஜித் முகத்தை காட்டுவதற்கு முன்பே, பல வழக்குகளின் பேப்பர்களுடன் மூக்கு இருக்கும் காட்சி வந்தது. அதன்பின்னர் திரையில் தோன்றும் அஜித் முகத்தில் எந்தச் சிரிப்பும் இன்றி காட்சியளித்தார். அவரது மீசையை தவிர தாடி, தலைமுடியில் கறுப்பு நிறத்தை காண்பது அரிதாக இருந்தது.
அமிதாப் பச்சனின் ரீமேக் திரைப்படம் என்றாலும், ட்ரெய்லரை பார்ப்பது புதுமையான திரைப்படம் போல தோன்றுகிறது. தமிழ் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்திருப்பது புரிகிறது. ஒவ்வொரு வசனத்தை கண் சிமிட்டால் பேசும் அஜித், தலையை நேராக பார்த்தபடியே மிரட்டும் தொனியில் பேசுகிறார். அத்துடன் மங்காத்தா படத்தில் ‘மனி.. மனி.. மனி’ என்று கூறுவது போல, ‘நிறைய.. நிறைய.. நிறைய’ என்று அஜித் தனது பாணியில் வசனத்தை தெறிக்கவிட்டுள்ளார். சண்டைக் காட்சியில் வழக்கம்போல் ஹீரோவாக இல்லாமல் எதார்த்தத்தையே பிரதிபலித்துள்ளார் அஜித். இறுதியில் ‘ஒருத்தர் மேல நீங்கள் விசுவாசம் காட்டுவதற்காக இன்னொருத்தரை ஏன் அசிக்கப்படுத்துறீங்க’ என்ற வசனத்தை பேசி முடித்திருக்கிறார் அஜித்.
இந்த வசனத்தை திரைப்படத்தில் வரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அஜித் பேசுவதாக இருந்தாலும், இதில் ஒரு மறைமுக தகவல் இருப்பது போன்றும் தோன்றுகிறது. ஒரு ஹீரோவின் படம் வரும் போது, அவருக்கு போட்டியான ஹீரோவை விமர்சிக்கும் சினிமா ரசிகர்களுக்கு கூறும் அறிவுரை போன்றும் உள்ளது.
குறிப்பாக அஜித் தனது ரசிகர்களுக்கு தான் அறிவுரை கூறுவார். அப்படிப் பார்த்தால், தன் மீது இருக்கும் விசுவாசத்தை காட்டுவதற்கு ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை விமர்க்காதீர்கள் என்று கூறுவதுபோல் இருக்கிறது. ‘விஸ்வாசம்’ மற்றும் ‘பேட்ட’ திரைப்படங்கள் வெளியாகிய போது, அஜித் ரசிகர்கள் ரஜினியை சமூக வலைத்தளங்களில் வசை பாடியது குறிப்பிடத்தக்கது.