“நான் செய்த தவறை நானே சரி செய்கிறேன்” - களத்தில் இறங்கிய அஜித்
நேற்று யாருமே எதிர்பார்க்கவில்லை. திடீரென்று ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் டிரெய்லர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று ஒரு அறிவிப்பு.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஒரு சின்ன அப்டேட்டிற்காக மட்டும் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு எக்கச் சக்க கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அப்புறம் என்ன இந்தக் கொண்டாட்டத்தை சமூக வலைத்தளங்கள் மூலமாக கதற அடித்தனர் அஜித் ரசிகர்கள். சரியாக ஆறு மணிக்கு வெளியானது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர். எப்படி இருப்பார் தல என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கும், வழக்கறிஞராகவே அவர் தன்னை வெளிப்படுத்திய விதமும் கொஞ்சம் புதுமையாக இருந்தது என்றே சொல்லலாம்.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், யுவனின் பின்னணி இசையும் ரசிகர்களை அடுத்த பிளாக் பஸ்டருக்கு தயாராக சொன்னது போல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக படம் பேசிய சமூக பிரச்னை பலரை உற்று நோக்க வைத்தது என்றே சொல்லாம். ‘சதுரங்க வேட்டை’,‘தீரன் அதிகாரம் ஒன்று’ என அடுத்தடுத்த கிரைம் கதைக்களங்களால் நம்மை கவனிக்க வைத்த ஹெச்.வினொத் இப்படத்தை இயக்கிருக்கிறார். இது தொடர்பாக அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் அஜித் உடனான பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதன்முறையாக அஜித்தை சந்தித்த போது அவருக்காக எழுதிய நெகடிவ் கதையை கூறியுள்ளார் வினோத், அதற்கு அஜித் இல்லை இனி நெகடிவ் கேரக்டர் போதும் வினோத், எனது படங்கள் மூலமாக மக்களுக்கு நம்பிக்கையையும் கனவையையும் விதைக்கனும்ணு சொன்னவர், ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’ படம் எனக்கு மிக பிடித்ததாகவும், அதை நீங்கள் படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இப்படி ஒரு மாஸ் ஹீரோவை இந்தக் கதையில் மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் எனத் தயங்கிய வினோத்திற்கு அஜித்திடம் வந்த பதில் சற்றே வியப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கிற விஷயங்கள் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் பெண்களை பற்றிய புரிதல் நமது சமூதாயத்தில் மிக பலவீனமாக காணப்படுகிறது என்றும் அஜித் கூறியுள்ளார். மேலும் தானும் கூட ஆரம்பத்தில் பெண்களை துரத்தித் துரத்தி காதலிக்கிற படத்தில் நடித்துள்ளதாகவும், அதனால் தனக்கே கூட தன் மேல் வருத்தமிருப்பதாகவும், தான் செய்த தவறை தானே சரி செய்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் மீண்டும் சந்தித்தபோது இந்தப் படத்தை ஒரு பெண் இயக்குனர் இயக்கினால் நன்றாக இருக்கும் என வினோத் கூற, அதற்கு அஜித் தவறு சார், ஒரு பெண் அவர்களுக்கு சாதகமாக பேசியிருக்கிறார்கள் என மக்கள் மிக எளிதாக எடுக்ககொள்ள வாய்ப்புள்ளதாகவும், இந்தப் படம் பெண்களுக்கான படம் கிடையாது என்றும் ஆண்களுக்கான படம் என்றும் அஜித் கூறியுள்ளார். அஜித்தின் இந்தப் பதில் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.