தன்னை கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்ட ரசிகரின் கருத்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.
வெங்கட் பிரபு, நடிகர், இயக்குநர், பாடகர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான இவர் ஏப்ரல் மாதத்தில், ஜீ, சிவகாசி, மழை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சென்னை 600028’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வெங்கட் பிரபுவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இதையடுத்து சரோஜா, கோவா என இளைஞர்களை மையப்படுத்தும் கதையை தேர்ந்தெடுத்து இயக்கினார். இதனால் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 2011 ஆம் அஜித், அர்ஜூன் நடிப்பில் ‘மங்காத்தா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் அஜித்தை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதனால் அஜித்துக்கு மேலும் மாஸ் கூடியது. இப்படத்தில் வரும் ‘எவ்வளவு நாள்தான் நான் நல்லவனாவே நடிக்கிறது’ என்று அஜித் பேசும் வசனம் அனைவரது மத்தியிலும் பெரும் உற்சாகத்தைத்தையும் வரவேற்பையும் பெற்றது.
இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி ஆகிய திரைப்படங்கள் எதிர்ப்பார்த்த அளவு ஓடவில்லை.
இந்நிலையில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லரை அப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு டிரெய்லரில் வரும் வசனமான ‘ஒருத்தர் மேல நீங்க விசுவாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க’ என கமெண்ட் செய்திருந்தார்.
ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க #thala #vinod #yuvan #Nerkondaparvai https://t.co/hhUem4ugeH
— venkat prabhu (@vp_offl) June 12, 2019
இதற்கு வெங்கட் பிரபுவின் ரசிகர் ஒருவர் அஜித், யுவன்சங்கர் ராஜா, வெங்கட் பிரபு மீண்டும் எப்போது இந்தக் கூட்டணி எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த இன்னொரு ரசிகர் “திரும்ப வெங்கட் பிரபு எடுத்தா அது கண்டிப்பாக ஃபிளாப் ஆகும் என அவருக்கே தெரியும். ஏனென்றால் வெங்கட் பிரபுகிட்ட ஒழுங்கான கதை இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
Vechikita vanjana pandrey bro!! Enniki enkita kadhai irrundhurukku ;))) https://t.co/S8SRc0zO0b
— venkat prabhu (@vp_offl) June 12, 2019
இந்நிலையில், அந்த ரசிகரின் கருத்துக்கு வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். அதாவது, “வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் ப்ரோ! என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு” என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.