தேர்தல் பிரச்சார வீடியோவில் சரத்குமார் குறித்து பேசியது ஏன் என நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. இதில் நடிகர் நாசர் தலையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் வெளியிடப்பட்ட பிரசார வீடியோவில், சரத்குமார், ராதாரவியால் நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு சரத்குமாரின் மகள் வரலட்சுமி கடுமையாக விஷாலை விமர்சித்திருந்தார். அவரை தொடர்ந்து நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா விஷாலை கடுமையாக சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் பாண்டவர் அணி ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், “கமல்ஹாசனிடம் ஆதரவு கோரினோம். அவர் கேட்கும் கேள்விக்கு முன்கூட்டியே பதில் வச்சிருக்கனும். நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை அவரிடம் எடுத்து கூறினோம். நடிகர் சங்க கட்டிடம் இன்னும் 5 மாதங்களில் முடிவடைந்து விடும் நிலையில் இருக்கிறது. கட்டடப்பணிக்கு எவ்வளவு பேர் தடை ஏற்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். 30 ஆண்டுகளில் நடக்காததை 3 ஆண்டுகளில் நடத்தியுள்ளோம். சில கருத்து வேறுபாடுகளால் எதிரணி உருவாகியுள்ளது.
தேர்தல் நடைபெறவிருக்கும் கல்லூரிக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. ஞாயிற்றுகிழமை என்பதால் பிரச்னை இருக்காது என நினைக்கிறேன். சட்டப்பிரிவு மூலமாக இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றுமே செய்யவில்லை என ராதிகா கேள்வி எழுப்பினார். உண்மைகளை வெளிப்படுத்தவே வீடியோ வெளியிட்டோம். தவறு நடந்திருந்தால் சங்கம் மூலமாகவோ, சட்ட ரீதியாகவோ தண்டனை பெற்று தருவோம் என்பதையே தெரிவித்திருந்தோம்.
ஒவ்வொருவரின் நம்பிக்கையும் ஓட்டு போடும் போது தெரியவரும். வரலட்சுமி போன்ற எல்லா நண்பர்களுக்கும் கோவம் இருக்கும். யார் எது வேண்டுமானாலும் பேச அதிகாரம் இருக்கு. அதை சட்டமே சொல்லுகிறது. தனிப்பட்ட முறையில் நானும் நண்பர்கள் மீது கோபப்படலாம். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.” எனத் தெரிவித்தார்.