தேர்தல் அதிகாரியிடம் நடிகர் விஷால் மீது பாக்யராஜ் அணியினர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகிறது. இதற்கான பிரசாரத்தில் இரு தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகளைச் சந்தித்து ஆதரவும் திரட்டி வருகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதியான பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இத்தேர்தலை நடத்துகிறார்.
இந்நிலையில் தேர்தல் அதிகாரியிடம் நடிகர் விஷால் மீது பாக்கியராஜ் அணியினர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் கூறும்போது, “ தேர்தல் அதிகாரி மூலம் வெளியாக வேண்டிய தகவல்கள் எல்லாமே விஷால் மூலம் வெளியாகுவதாக பத்திரிகைகளில் காண முடிகிறது. எனவே இதுகுறித்து உரிய விளக்கம் கேட்க தேர்தல் அதிகாரியை சந்திக்க வந்தோம். அப்போது விஷால் மீது தேர்தல் அதிகாரியிடம் புகாரும் அளித்தோம்” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே இத்தேர்தலில் பாக்யராஜ் அணி சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேஷ் கூறும்போது, “ தேர்தல் நடத்த அனுமதி கேட்டு விஷால் கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். தேர்தல் அதிகாரி தானே இதனை செய்ய வேண்டும். தேர்தலை விஷால் நடத்துகிறாரா அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி நடத்துகிறாரா..? பதிவாளர் அலுவலத்தில் இருந்து வந்த வாக்காளர் பட்டியலில் 300 வாக்காளர்களை நீக்கி உள்ளார்கள். கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்த்துள்ளார்கள். இந்த விவரங்கள் எங்களுக்கு சொல்லப்படவேயில்லலை. வாக்குச் சீட்டு விவரங்கள் விளம்பர பலகையில் ஒட்டவில்லை. அதற்குள் 1,100 தபால் ஓட்டுக்கள் வந்துவிட்டதா விஷால் கூறுகிறார். எனவேதான் இதுகுறித்து நேரில் விளக்கம் பெற வந்தோம்” என தெரிவித்தார்.