நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில் கல்லூரி நிர்வாகத்திற்கு பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் விஷாலின் பாண்டவர் அணிக்கும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் தேர்தல் அன்று தகராறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை சுட்டிக் காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தலை வேறு இடத்திற்கு மாற்ற பரிந்துரைக்கும்படி கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் காவல்துறை அனுமதி பெற்றால்தான் தேர்தலை நடத்த முடியும் என்ற சூழல் நிலவுவதால், தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விஷால் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.