இந்தி சின்னத்திரை நடிகை ஒருவர், தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி சீரியல் நடிகை பிரக்ன்ய பிரசாந்த் பார்கர் (40). இவர் தனது மகள் ஸ்ருதி, கணவர் பார்கருடன் மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகிலுள்ள கல்வாவில் வசித்து வந்தார். பார்க்கர், நேற்று காலை ஜிம்முக்கு சென்றுவிட்டு 9.30 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிரக்ன்யாவும் படுக்கையில் உயிரிழந்த நிலையில் ஸ்ருதியும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ’‘தனது மகளை கொன்றுவிட்டு நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் காரணமல்ல’’ என்று பிரக்ன்யா எழுதிய கடிதம் வீட்டில் கிடைத்தது.
கடந்த சில வருடங்களாக, பிரக்ன்யாவுக்கு நடிப்பு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் அவர் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.