கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் வடசென்னை படத்தில் நடித்த சரண் சக்தி இணைந்துள்ளார்.
இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் கன்னட திரையுலகில் பிரம்மாண்டமாக உருவாகி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் கேஜிஎஃப். இந்தப் படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் வெளியானது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கேஜிஎஃப் திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது
பணக்காரனாக துடிக்கும் ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறுவதும், பின்னர் தங்கச்சுரங்கத்தை நிர்வகிக்கும் வில்லனை கொல்வதற்காக அவன் இடத்துக்கே செல்லும் கதாநாயகன் அங்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களுக்காக வருந்துவதும், அதன் பின் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் என மாஸ் சினிமாவாக உருவாகி இருந்தது கேஜிஎஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட கேஜிஎஃப்பின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தமிழ் நடிகரான சரண் சக்தி இணைந்துள்ளார். கடல், ரம்மி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சரண், வட சென்னை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸின் சகோதரனாக நடித்து கவனம் பெற்றார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரண், ''நல்ல குழு, நட்பான இயக்குநர் ஆகியோருடன் இணைந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் பணியாற்றவுள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது'' என தெரிவித்துள்ளார்.